
சத்தீஸ்கர் மாநிலத்தின் கைராகர் மாவட்டத்தில் ஒரு புதுமணத் தம்பதிகள் கடந்த ஆறு நாட்களாக மர்மமாக காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவை உலுக்கிய இந்தூர் தம்பதிகள் ராஜா மற்றும் சோனம் ரகுவன்ஷி வழக்கு விவகாரத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளதால், இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கைராகரின் சுய்காடன் பகுதியைச் சேர்ந்த நரேந்திர வர்மா மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் வர்மா ஆகியோர் ஜூன் 14 ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், அதற்குப் பிறகு அவர்க ள்யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.
இருவரும் நடைப்பயணமாக ட்விங்கிளின் தாய் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் அந்த வீட்டிற்கு செல்லவில்லை. அதே நேரத்தில், இருவரின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆக உள்ளது. தொடர்ந்து ஆறு நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இருவரது குடும்பத்தினரும் ஜூன் 17 அன்று சுய்காடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இருவரின் தொலைபேசி சிக்னல் வழியாக அவர்களின் கடைசி இருப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், சமீபத்தில் நடந்த இந்தூர் தம்பதிகள் வழக்கை ஒத்திருக்கிறது. அந்த வழக்கில், ராஜா ரகுவன்ஷி தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்ற பின்னர் காணாமல் போனதாகவும், பின்னர் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், விசாரணையில் சோனம் தனது கணவரை கொன்றது உறுதி செய்யப்பட்டதாகவும் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து, சத்தீஸ்கர் தம்பதிகள் வழக்கையும் போலீசார் மிகுந்த கவனத்துடன் விசாரித்து வருகின்றனர். நரேந்திர-ட்விங்கிள் தம்பதியினர் சமீபத்தில் அக்ஷய திருதியை நாளில் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் பல கோணங்களில் விசாரணையை தீவிரமாக செய்து வருகின்றனர். தம்பதியினரது மொபைல் டேட்டா, சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குடும்பத்தினர் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் உள்ள நிலையில், பொதுமக்களும் இந்த விவகாரத்தில் அவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் விரைந்து அவர்களை கண்டுபிடிக்க வேண்டுமென்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.