சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி அவரை திருமணம் செய்துள்ளார். உடனே போலீசார் அந்த பெண்ணின் கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்து தனது மனைவியை காதலனுடன் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த தாலியை கழற்றி வைத்துவிட்டு தன்னுடன் வருமாறு அவர் கெஞ்சினார். இருப்பினும் மனைவி, நான் காதலனுடன் தான் வாழ்வேன் எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் அழுததும் ஒரு குழந்தை அம்மா அழுகிறார்கள். என்னன்னு கேளுங்க என பெண் போலீசாரிடம் கூறியது காண்போரை கண்கலங்க வைத்தது.

இதனையடுத்து அந்த வாலிபரிடம் இரண்டு குழந்தைகளின் தாயை திருமணம் செய்து எப்படி குடும்பம் நடத்துவாய்? ஒரு அழகான குடும்பத்தை அழித்து விடாதே என போலீசார் அறிவுரை கூறினார். இதனை ஏற்று அந்த வாலிபர் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தற்போது அந்த பெண் கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் அவருக்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.