அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள் இணைந்து செய்த புதிய ஆய்வு ஒன்று உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, மனிதன் கழிக்கும் சிறுநீரில் இருந்து பல் மற்றும் எலும்பு மாற்றும் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் ஹைட்ரோக்ஸி அப்படைட் உருவாக்க முடியும் என தெரியவந்துள்ளது. இது பல் மேல் பட்டை மற்றும் எலும்புகளின் உறுதியான பகுதி ஆகும்.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், ‘osteoyeast’ எனும் செயற்கை ஈஸ்ட் பாக்டீரியாவை பயன்படுத்தி, சிறுநீரில் உள்ள யூரியாவை முற்றிலும் உடைத்து, அதன் மூலம் ஹைட்ரோக்ஸி அப்படைட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொருள் மிகவும் விலைமதிப்புள்ளதாகும். ஒரு கிலோக்கு 80 டாலருக்கும் மேல் விலைவாய்ந்ததாக இருக்கிறது. 2030க்குள் இந்த சந்தை மதிப்பு 3.5 பில்லியன் டாலரைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு சிக்கல்களை குறைக்கும் ஒரு தீர்வாக இது பார்க்கப்படுகிறது. அதேசமயம், மருத்துவத் துறையில் இது ஒரு புதிய புரட்சியாகவும் இருக்க முடியும். “மனித சிறுநீரை வீணாக்காமல், அதில் இருந்து மருத்துவ பயன்பாட்டு பொருளை உருவாக்குவது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மருத்துவ வளர்ச்சியையும்  ஏற்படுத்தும்” என கூறியிருக்கிறார் ஆய்வில் பங்கேற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிசைலுஸ்.

இந்த முயற்சி சமூக விழிப்புணர்வுடன் இணைந்து, எதிர்காலத்தில் 3D அச்சிடும் தொழில்நுட்பத்துடனும் இணைக்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.