
ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலா மாவட்டத்தில், சீதாராம்பூர் கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணை, பழைய காதலன் ஒரு காரில் வந்து சந்தித்துள்ளார். அவருடன் அவரது நண்பரும் வந்திருந்தார்.
மூவரும் காரில் அமர்ந்தவுடன், அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர், காதலனையும், அவனது நண்பனையும் காரில் இருந்து இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பெண்ணின் கணவரும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் கணவர், பெற்றோர், மாமியார், காதலன் மற்றும் அவருடைய கிராம பஞ்சாயத்தும் கலந்து கொண்டனர். மூன்று கிராம பஞ்சாயத்துகள் இணைந்து நடத்திய இந்த கூட்டத்தில், காலை தொடங்கி மாலை வரை விவாதம் நடைபெற்றது. முடிவில், பெண்ணை அவரது காதலனுடன் அனுப்பும் முடிவுக்கு வந்தனர்.
இதற்காக, காதலனுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அத்துடன் விவாகரத்து வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், எஸ்டிபிஓ சமீர் குமார் சவையா மற்றும் ஆர்ஐடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வினய் குமார் சிங் ஆகியோர் தங்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆனால், கிராம மக்கள் காவல்துறையின் தலையீட்டை எதிர்த்து, இது தனி குடும்ப விவகாரம் என்றும், தாங்கள் பஞ்சாயத்து முறையில் தீர்வு காண வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இதனால், பெரும் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீசார் சுமூகமாக விலகினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.