
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்டு சில வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விமான விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிர் பிழைத்துள்ள விஸ்வாஸ் குமார் என்பவர் கூறிய தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
“நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பதை நானே நம்ப முடியவில்லை. ஒரு நிமிடத்திற்கு நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்,” என அவர் கூறியுள்ளார்.
விமானம் தரையில் விழும் தருணத்தில், விஸ்வாஸ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் இருந்த அவசரக்கால கதவு திடீரென உடைந்ததால், அவர் அந்த வழியாக குதித்து தப்பியதாக கூறியுள்ளார்.
“விமானம் விழுந்ததும் உடனே அது வெடித்துத் தீப்பிடிக்கத் தொடங்கியது. என் கையில் தீப்பற்றி எரிந்தது. ஆனால் சில நிமிடங்களில் வெளியே வந்த பிறகு என்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என கூறியுள்ளார்.
விபத்துக்குப் பிறகு விஸ்வாஸ் தனது பாக்கெட்டில் இருந்த செல்போனில் தந்தைக்கு அழைத்துச் சென்று, “நான் உயிரோடு இருக்கிறேன், ஆனால் விமானம் விழுந்துவிட்டது.
எனது சகோதரரைக் காணவில்லை. அவர் அருகிலேயே இருந்தார். மற்ற பயணிகளும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது எல்லாமே ஒரு கனவு போல இருக்கிறது,” என விஸ்வாஸ் கூறியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.