
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் என்ற மாவட்டத்தில் நேஷனல் பார்க் அமைந்துள்ளது. அங்கு நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பெயர் பாஸ்கர் ராவ்.
முன்னதாகவே இந்த நபரை பிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 45 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிஜாப்பூர் நேஷனல் பார்க்கில் பாஸ்கர் ராவ் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஸ்கர் ராவை பிடிக்க முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கி, வெடிபொருள்கள் மற்றும் பிற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் வேறு நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கிறார்களை என தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த வியாழக்கிழமை மற்றொரு நக்சலைட்டுகளின் மூத்த தலைவரான சுதாகர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 21-ம் தேதி நக்சலைட்டுகளின் பொதுச் செயலாளரான பசவ ராஜு மற்றும் அவருடன் இருந்த 26 நக்சலைட்டுகள் உட்பட 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 3 வாரங்களில் இதுவரை நக்சலைட்களின் மூன்று முக்கிய தலைவர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.