உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள சமௌலி கிராமத்தில், ஒரு வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் 52 பாம்புகள் வெளியே வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம், அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியில் வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இத்தனை எண்ணிக்கையில் பாம்புகள் எப்படி வந்தன என்பதை நினைத்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

புகாரின்படி, வீட்டின் ஒரு பகுதியில் உள்ள விலங்குகளுக்கான அடைப்பில், ஒரு நபர் இருந்தபோது, திடீரென ஒரு பாம்பு தவழ்ந்து வந்ததைக் கவனித்தார். உடனே, அக்கம்பக்கத்தவர்களின் உதவியுடன் அந்த பாம்பை கொன்றனர். ஆனால் அதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், அதன் பிறகு தொடர்ச்சியாக மேலும் பல பாம்புகள் அங்கிருந்து வெளியே வந்தன. இரவு முழுக்க மக்கள் தீவிரமாக இருந்தபடியே மொத்தம் 52 பாம்புகளை கண்டுபிடித்து கொன்றனர். பாம்புகள் வந்த இடம் மற்றும் காரணம் குறித்து எதுவும் உறுதியாக தெரியவில்லை.

 

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தெரிவித்ததாவது, “பாம்புகள் எப்படி வந்தன, எங்கே இருந்தன, ஏன் இத்தனை பாம்புகள் ஒரே இடத்தில் காணப்பட்டன என்பதை அறிய விசாரணை நடக்கிறது. முறையான ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பாம்புகள் சுற்றி வந்த வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பொதுமக்கள் மிகவும் பயந்த நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதபடி உரிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.