
தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் ஜகதேவ்பூர் மண்டலத்தில் உள்ள சாட்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஜானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாய தொழிலாளர்களான பொம்மா கனகையா மற்றும் கனகாம்மா. இதில் ஜானி பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு, தனது பெற்றோருடன் சேர்ந்து வயலில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ஜானி சமீப காலமாக, பெற்றோரிடம் பிஎம்.டபிள்யூ (BMW) கார் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், ஏழ்மை காரணமாக அதற்கு இயலாது என பெற்றோர் விளக்கி சமாதானப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும் பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக “Swift Dzire” கார் வாங்கித் தருவோம் என கூறியபோதும், ஜானி அதனை ஏற்கவில்லை.
அதுமட்டுமின்றி, புதிய வீடு கட்டி ராஜரீதியான வாழ்க்கை வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர், அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாத நிலைமையில் இருந்தனர்.
இதனால் மனமுடைந்த ஜானி, வயலில் விஷம் குடித்து வீடு திரும்பியதும், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இளைஞரின் இறப்பு, குடும்பத்தினரிடையே மட்டுமல்லாது, முழு கிராமத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளைஞர்களில் உயர்ந்த கனவுகளும், அதற்கேற்ப பெற்றோரின் பொருளாதாரமற்ற நிலையும் எவ்வளவு கோர முடிவுகளுக்குக் காரணமாகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.