யூடியூப் மூலம் பிரபலமான நடிகர் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவில் வீட்டிற்கு செல்லும் பாதையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் கோயிலையும், ஊர் பொதுமக்களையும் அவதூறாக பேசுவதாக ஜி.பி. முத்துவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதனால் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் பாலசுந்தரம் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தனது தரப்பு நியாயத்தை கூறிய ஜிபி முத்து, தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதனை முழுமையாக விசாரித்த அதிகாரிகள் ஜி. பி. முத்துவின் வீட்டிற்கு செல்லும் பாதையை சரி செய்து அந்தப் பகுதியில் சாலைகள் அமைத்து, தெருவிளக்குகள் போன்ற அடிப்படை சேவைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதன்பின் அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதோ, கட்டுமானங்கள் கட்டுவதோ கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் கோயிலையும் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இனிவரும் காலங்களிலும் அரசு விதிகளை மீறி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதன் பின் இரு தரப்பினர் இடையே ஒப்புதல் கடிதம் எழுதி கையொப்பம் வாங்கினர். இதனை அடுத்து நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவடைந்தது.