தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் நடைபெற்ற போது, முக்கிய பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் தொகுதியில் ஏழை, எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவில் வீடு திரும்புவதால் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் பெற முடியவில்லை என்பதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) மூலம் நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாகர்கோயிலில் ஏற்கனவே 31 நியாய விலைக்கடைகளும், 10 பகுதிநேரக் கடைகளும் செயல்பட்டு வருவதால், நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்கும் திட்டம் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கர்நாடகத்தில் ரேசன் பொருட்களை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுபோல தமிழகத்திலும் அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்பட்டுவருகிறது. இதனை ஆய்வு செய்ய, மார்ச் 20-ஆம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் பார்வையிட இருப்பதாகவும், ஆய்வுக்குப் பிறகு அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்