
ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் அனன்யா ராவ் (26). இவர் அப்பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனன்யா கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சன்பூரில் உள்ள துங்கபத்ரா ஆற்றிற்கு நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். அங்கு காலை 8:30 மணி அளவில் ஆற்றின் அருகே உள்ள ஒரு பெரிய பாறையில் இருந்து குதித்துள்ளார். அணையில் இருந்து நீரின் வேகம் அதிகமாக வருவதால் சுற்றுலா ஒழுங்குபடுத்துபவர்கள் தொடர் எச்சரிக்கை கொடுத்து வந்துள்ளனர்.
இருந்தும் அனன்யா பாதுகாப்பு உடை இல்லாமல் குதித்துள்ளார். ஊழியர்கள் பாதுகாப்பு உடையை எடுத்து வருவதற்குள் அனன்யா வேகமாக ஆற்றில் பாய்ந்து விட்டார். ஆற்றில் பாய்ந்த அனன்யா சில நிமிடங்கள் நீரில் மிதந்து நீந்தியுள்ளார். ஆனால் திடீரென காணவில்லை. இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து பேரழிவுகளுக்கு எதிரான மீட்பு படை, தேசிய பேரழிவு மீட்பு படை வீரர்கள் இணைந்து தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் இந்த ஆற்றில் பெரிய பாறை குகைகள் உள்ளன மற்றும் ஆழமான பகுதிகளும் உள்ளன என தீயணைப்புத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நீர் நிலை சவாரிகள், நீச்சல் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த மருத்துவர் அனன்யாவின் உடல் வியாழன் கிழமை மாலை ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த தேடலில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளூர் மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர். இதனிடையில் ஆற்றின் நீரின் வெளியேற்றத்தையும் அணை அதிகாரிகள் குறைத்தனர். இறுதியில் JSW நீருக்கடியில் செயல்படும் மீட்பு குழுவினரால் அனன்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாறைகளில் டைவிங் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆற்றில் நீச்சல், சவாரிகள், டைவிங் போன்ற நீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுற்றுலா நடத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து துங்கபத்ரா ஆற்றில் அதிக நீர் வெளியேற்றப்படுவதால் நதியின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால் நீர்நிலை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீர்மட்டம் குறைந்த உடன் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.