
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததால் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களான பிரகாஷ்,ஆறுமுகம் மற்றும் சின்னசாமி ஆகியோர்தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி,பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை ஆசிரியரே பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி நான் பொறுப்புடன் கூறிய போது எடப்பாடி பழனிச்சாமி பீதியை கிளப்புகிறார் என்று திமுக அமைச்சர்கள் இந்த விவகாரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அரசு பள்ளியில் படிக்கிற மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்ந்த கதை. இந்த கொடூர சம்பவத்திற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானதற்கு திமுக அரசு வெட்கி தலை குனிய வேண்டும்.கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.மேலும் ஆசிரியர்கள் மூவருக்கும் உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.