குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிக்கும் மாந்திரீக சடங்கு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில அகமதாபாத்தில் அரசு பொது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் மாந்திரீகம் செய்யும் நபர் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்து ஐசியூ வரை செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மற்றொரு வீடியோவில் மாந்திரீகம் செய்பவரிடம் உங்களால் தான் எங்களின் உறவினர் பிழைத்தார் என உறவினர்கள் பாராட்டும் காட்சிகளும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறியதாவது, நோயாளியின் உறவினராக மாந்திரீகவாதியை அழைத்து வந்துள்ளனர் அவர் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டு தவறாக உபயோகப்படுத்தி தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றுள்ளார். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க போடப்பட்டிருந்த திரையை விலக்கி சடங்குகள் செய்துள்ளனர்.

அந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் படிப்படியாக சரியாகி வருகிறார். ஆனால் மூட நம்பிக்கையால் தான் அவர் குணமடைந்தார் என கூறுவது அர்த்தம் இல்லாதது. 15 முதல் 20 நாட்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. விதி மீறல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வேறு மருத்துவமனைகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.