
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் குர்லா பகுதியில் சஞ்சய் என்ற ஓட்டுநர் 332 வழித்தட எண் கொண்ட பேருந்தை ஒட்டி சென்றார். இந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் சென்றது. இதில் சாலையில் நின்ற ஆட்டோக்கள், வாகனங்கள், பைக்குகள், போலீஸ் வாகனம் உட்பட சாலையில் நின்று கொண்டிருந்த அனைத்தின் மீதும் மோதி கீழே தள்ளியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த சில பொதுமக்கள் மீதும் பேருந்து மோதியுள்ளது. கடைசியாக அங்கு இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில் மீது அதிவேகமாக மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் குறைந்தது 49 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள குர்லா பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில் 6 பேரில் 4 போலீஸ்காரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இது குறித்த விசாரணையில் ஓலட்ரோ என்ற நிறுவனம்தான் இந்த பேருந்தை தயாரித்துள்ளது எனவும், இந்தப் பேருந்துகளை பெரும்பாலும் தனியார் நிறுவன ஓட்டுனர்களே இயக்கி வருவதும் தெரியவந்தது. மேலும் விபத்து நடந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் கனரக வாகனங்கள் ஓட்டுவதில் பயிற்சி இல்லாதவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.