
அதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி. இவர் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மழையின் காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. எனவே தொடர்ந்து அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடி உயர்ந்த பொறுப்புக்கு வந்தவர்கள் வேல்முருகன் மற்றும் திருமாவளவன். அவர்கள் எந்த கட்சியில் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எங்கு இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து பாடுபட வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சில ஊடகங்களும், சில அரசியல் விமர்சகர்களும் சுயநலமில்லாமல் கூறி வருகிறார்கள்.
அதிமுகவுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக கோர்ட் மற்றும் காவல் நிலையத்திற்கு சென்றவர்களை கண்டறிந்து வெளியேற்றியுள்ளோம். வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா என்று ஊடகங்கள் கேட்கலாம். தவறு செய்தவர்கள் அதிமுகவில் இணைய வேண்டும் என்பது சட்ட விதிகளில் இல்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து தவறு செய்தவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்படும் போது அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் பொதுச் செயலாளர் அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவெடுப்பார். ஒருவேளை அவர்கள் தவறு செய்வார்கள் என்று தோன்றினால் கட்சியில் சேர்க்கப்பட மாட்டார்கள். அது பொதுச் செயலாளரின் தனிப்பட்ட விருப்பம்.
தற்போது யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் பரிசீலிக்க ரெடி. சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரும் முன் அனுபவம் இல்லாதவர்கள் என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் தற்போது சுயநலத்துக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் ஒருவேளை கட்சி நலனுக்காக கருத்து கூறினால் அந்த கருத்துக்களின் அடிப்படையில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து யோசிப்போம் என்றார். மேலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவர்களை அதிமுக கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று கேபி முனுசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.