அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரசிகர்கள் அவரை ஆசியக்கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து வருகின்றனர்..

டப்ளினில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3வது மற்றும் கடைசி ஆட்டம் ஆகஸ்ட் 23 புதன்கிழமை நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 58ரன்களையும், சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 40 ரன்களையும் எடுத்தனர். மேலும் ஐபிஎல் நட்சத்திரம் ரிங்கு சிங் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 38 ரன்களும், துபே 16 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 186 ரன்கள் இலக்கை துரத்திய அயர்லாந்து அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் ஆண்ட்ரூ பால்பிர்னி அதிகபட்சமாக 51 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (18) மற்றும் திலக் வர்மா (1) ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதே சமயம், இந்த ஆரம்ப விக்கெட்டுகளுக்கு பிறகு, தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

போட்டியில், சஞ்சு சாம்சன் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார், இந்த இடத்தில் அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். இதனைப்பார்க்கும் போது யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸை பார்த்தது போல அனைவருக்கும் நினைவுக்கு வந்தது. 4வது இடத்தில் யுவராஜ் சிங் அற்புதமாக செயல்பட்ட விதம். சஞ்சுவும் அதையே செய்தார். வரவிருக்கும் ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கு முன் சஞ்சுவின் இந்த ஆட்டத்தைப் பார்த்து, ரசிகர்கள் சஞ்சுவை நம்பர் 4 க்கு சிறந்த போட்டியாளர் என்று அழைக்கிறார்கள். அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் அவர் இன்னிங்ஸின் 11 வது ஓவரில் ஜோஷ்வா லிட்டில்ஓவரை வெளுத்து வாங்குவதை காணலாம்.

இன்னிங்ஸின் 11வது ஓவரின் முதல், 2வது மற்றும் 3வது பந்தில், சஞ்சு சாம்சன் அற்புதமான பவுண்டரிகளை அடித்து, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.. இந்த ஓவரில் மொத்தம் 18 ரன்கள் எடுக்கப்பட்டது. எனினும், இன்னிங்ஸின் 13வது ஓவரில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 3வதாக தனது விக்கெட்டை இழந்தார். அவர் 26 பந்துகளில் 40 ரன்கள் (153.85 ஸ்ட்ரைக் ரேட்) எடுத்து அவுட் ஆனார். அவர் 13வது ஓவரில் பெஞ்சமின் வைட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சரியாக ஆடாத சாம்சன் மீது விமர்சனம் எழுந்த நிலையில், இந்த போட்டியில் அற்புதமாக ஆடியுள்ளார். இன்று மாலை பிசிசிஐ ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்கிறது. சாம்சன் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..