பழம்பெரும் வில்லன் நடிகர் ஆன நம்பியார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரண்டு மகன்களும் சினேகலதா என்ற மகளும் இருக்கின்றார்கள். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டதற்கு பின் அவரின் மகனான சுகுமாரன் உயிரிழந்து விட்டார். இதை அடுத்து சுகுமாரனின் மகனும் நம்பியாரின் பேரனும் ஆன சித்தார்த் சுகுமார் சென்னையில் இருக்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்திருக்கின்றார்கள்.

அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தாத்தா நம்பியாரின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள், கோப்பைகள், சபரிமலை மற்றும் ஐயப்பனின் ஓவியங்கள், இசை பொருட்கள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் எனது அத்தையிடம் அதாவது நம்பியாரின் மகளிடம் இருக்கின்றது. அந்த பொருட்களை அவர் எனக்கு தருவதாக கூறிய நிலையில் தற்போது தர மறுக்கின்றார். ஆகையால் அந்த பொருட்களை என்னிடம் தருமாறு அதில் தெரிவித்திருக்கின்றார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் விருதுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து சினேகலதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தனது தந்தை நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் தனக்குத்தான் சொந்தம் எனவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கின்றார். இந்த வழக்கு விசாரணையானது நேற்று நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு நம்பியார் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மேலும் ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கின்றது.