கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கும் உட்பட்ட ஆழியாரில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நுழைவு வாயிலை மூடி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த நான்காம் தேதி முதல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இன்று முதல் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீரை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் சொல்வதை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியும் தீவிரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.