மத்திய கிழக்கு போர்த் தடத்தில் நேற்று  பரபரப்பான சூழல் உருவானது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் விமானப்படை ஈரானின் முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்களை குறிவைத்து சகதியாக குண்டுகளை வீசியது. இதில், ஈரானின் நான்கு அணுசக்தி தளங்கள், இரு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன.

மேலும், 6 அணுசக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர். சிறப்பாக திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலில், 200-க்கும் மேற்பட்ட போர்விமானங்கள், நூற்றுக்கணக்கான டிரோன்கள் ஈரானின் பல இடங்களை தாக்கின. குறிப்பாக, பூமிக்கு அடியில் அமைந்த நட்டன்ஸ் அணுஆலையின் முக்கிய பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் 100 டிரோன்களை அனுப்பியது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் அவற்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஈரான் மத தலைவர் அலி கொமேனி, “இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி தரப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற தாக்குதல்களால் மத்திய கிழக்கில் நிலவும் போர்ப்பதற்றம் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி  இஸ்ரேல் பிரதமருடன் பேசினார். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.