
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக “பரஸ்பர வரிவிதிப்பு” முறையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
இதன் கீழ், அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளிடம் இருந்து வருகை செய்யும் இறக்குமதி பொருட்களுக்கு அதே அளவிலான வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறிப்பாக சீனாவை குறிவைத்து, ஏற்கனவே இருந்த 25% வரிக்கு கூடுதலாக 34% வரி விதித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு பதிலடி அளிக்க சீனாவும் அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதே 34% வரியை விதிப்பதாக அறிவித்தது.
இதனால், உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உலக பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன, முதலீட்டாளர்கள் பயத்தில் உள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் இந்த வர்த்தகப் போர், அமெரிக்காவை மந்தநிலை நோக்கி இழுக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “சீனா எங்கள் மீது விதித்த 34% வரியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில் 50% கூடுதல் வரியை 9ம் தேதி முதல் விதிக்கிறோம்” என்று எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த சீனா, “தப்பு மேல தப்பு பண்றீங்க… எங்கள் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம்” என்றும், அமெரிக்காவின் அச்சுறுத்தல் மற்றும் கொடுமை நிலையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தன்னம்பிக்கையுடன் பதிலளித்துள்ளது. வர்த்தக போர் சூடுபிடிக்க, இரு நாட்டு உறவுகள் மேலும் தீவிர பதற்றத்திற்குள் நகர்கின்றன.