
ஃபரிதாபாத் மாவட்ட சிவில் மருத்துவமனையில் நடந்த பரபரப்பான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, பொது எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பங்கஜ் மோகன் சர்மா என்ற ஒருவர், பிரபல இதய நிபுணர் டாக்டர் பங்கஜ் மோகனின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி, போலியான இதய நிபுணராக நடித்து வந்தார். ஜூலை 2024 முதல் பிப்ரவரி 2025 வரை மொத்தம் எட்டு மாதங்கள் இவர் மருத்துவமனையில் பணியாற்றியதாக தெரிய வந்துள்ளது. இந்த காலத்தில் இவர் 50க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரிடம் ஆப்ரேஷன் செய்து கொண்ட ஒருவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் உண்மையான டாக்டர் பங்கஜ் மோகனை சந்தித்தபோது தெரியவந்தது. விசாரணையில், போலி மருத்துவர் உண்மையான நிபுணரின் பதிவு எண் 2456ஐ பயன்படுத்தி, இதய மையத்தில் சிகிச்சை அளித்ததும், அவரின் பெயரில் பொது நோயாளிகளுக்கு ஸ்டெண்ட் உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இவர் ஆபரேஷன் செய்ததில் பல நோயாளிகள் மரணம் அடைந்துள்ளதாகவும், சிலரின் நிலை மோசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதயமையம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் PPT அடிப்படையில் தொடங்கப்பட்டு, ஏற்கனவே முறைகேடுகள் காரணமாக சிக்கல்களால் வாடி வந்தது குறிப்பிடத்தக்கது. போலி மருத்துவர் சம்பவம் தெரியவந்ததும், அவர் மையத்திற்கு வருவதை நிறுத்தினார். பின்னர், பலர் உண்மையான பங்கஜ் மோகனை அணுகியபோது உண்மை வெடித்தது.
மருத்துவமனையின் தலைமை அதிகாரிகள் மற்றும் இதயமையம் தொடர்புடைய பலர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உண்மையான டாக்டர் பங்கஜ் மோகன், போலி மருத்துவர் தனது பதிவு எண்ணை தவறாக பயன்படுத்தியதாக சட்டப்படி புகார் அளித்துள்ளார்.
மேலும் இறந்தவர்களின் உறவினர்கள், இந்த போலியான சிகிச்சையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, மருத்துவத் துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது.