உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில், புதன்கிழமை அதிகாலை ஸ்கூட்டரில் சென்ற சகோதரியும் (அல்ஷிஃபா, 19) அவரது தம்பியும் (தௌஹித், 15) விபத்தில் சிக்கினர். தவறான திசையில் வந்த லோடிங் லாரி, அவர்களின் ஸ்கூட்டரை மோதியது.

இதில் இருவரும் சாலையில் கடுமையாக காயமடைந்து விழுந்தனர். சுமார் 45 நிமிடங்கள் வரை, இருவரும் வலியால் தவித்தபோதும், அருகே கூடிய மக்கள் மருத்துவ உதவி செய்யாமல், தங்கள் மொபைல் போன்களில் வீடியோ மட்டும் எடுத்தனர்.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவமனை அனுப்பப்படவில்லை. ஆம்புலன்ஸ் வந்தபோது, இருவரும் உயிரிழந்திருந்தனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அல்ஷிஃபா, ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தவர்.

அன்று காலை தேர்வுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடந்தது. தம்பி தௌஹித், அவரை கல்யாண்பூர் ரயில்நிலையம் வரை அழைத்துச் செல்வதாக இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது. லாரி ஓட்டுநர் தப்பியோடியுள்ளார்.

இந்த சோகமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மக்கள் மனிதநேயமின்றி, காயமடைந்தவர்களை வீடியோ எடுப்பதில் மட்டும் ஈடுபட்டனர் என்பது சமூகம் எதை நோக்கி செல்கிறது.. மனிதநேயத்தை கேள்விக்குறி ஆக்குகிறதோ ? இந்த சம்பவத்தால்  குடும்பத்தில் தந்தை முகமது ஷகீல், தாயார் குஸ்னுமா பானோ, மற்றும் சகோதரிகள் ஆகியோர் மயக்கம் மற்றும் கதறலோடு துயரத்தில் மூழ்கினர். . குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியதாவது, “எங்கள் வீடு பாழாயிற்று… ஒரே நாளில் இருவரையும் இழந்துவிட்டோம்.” இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.