
ராஜஸ்தானில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கோட்டா நகர கிளையில் பணியாற்றிய வாடிக்கையாளர்கள் சேவை மேலாளர் சாக்ஷி குப்தா என்ற பெண் ரூ.4.58 கோடி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து பணம் எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். இதற்காக 41 வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களை மாற்றி, பரிவர்த்தனைகளை அவர்களுக்குச் செல்லாமல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் மே 31, 2025 அன்று சாக்ஷி கைது செய்யப்பட்டார்.
சாக்ஷி, கடந்த 2020 முதல் 2023 வரை இந்த பண மோசடியை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 31 வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புகளை முறித்து ₹1.34 கோடி மற்றும் தனிநபர் கடனாக ₹3.4 லட்சம் மோசடி செய்துள்ளார். இன்ஸ்டா கியோஸ்க், டிஜிட்டல் வங்கி சேனல்கள், டெபிட் கார்டுகள் மூலமாக பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மூத்த பெண் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து மட்டும் ரூ.3.22 கோடி எடுத்துள்ளதும் கண்டறியப்பட்டது.
சாக்ஷி, வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணை பதிவு செய்து OTP-களையும் எச்சரிக்கைகளையும் தடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். மேலும் தனது குடும்பத்தினர் பெயரில் ₹40-₹50 லட்சம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால், எந்த லாபமும் ஏற்படாமல் பெரும்பாலான பணத்தை இழந்துள்ளார். இது பற்றி வங்கி மேல் நிர்வாகம் அறிந்தவுடன் உடனடியாக போலீசில் புகார் அளித்து, சாக்ஷியை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தது.
DCM கிளை மேலாளர் தருண் தாதிச், பிப்ரவரி 18, 2025 அன்று போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு சாக்ஷி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் மற்ற யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாக்ஷி, கடந்த 2023-இல் ஷரத் குப்தா என்ற வங்கி ஊழியருடன் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் தற்போது வேறு வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.