
மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், பல நாட்களாக “சஞ்சய் வர்மா யார்?” என்ற கேள்விக்கு தற்போது காவல்துறையினர் விடை கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் அவரது மனைவி சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா பயன்படுத்திய எண்ணை ‘சஞ்சய் வர்மா’ என்ற போலியான பெயரில் பதிவுசெய்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தனது கணவனை கொலை செய்வதற்கான திட்டத்தில், சந்தேகம் வராதவாறு எண்ணை மர்மமாக வைத்திருந்த சோனம், மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை – 39 நாட்களில் – அந்த எண்ணுக்கு 234 முறை போன் செய்திருப்பதும், ஒவ்வொரு அழைப்பும் 30 முதல் 60 விநாடிகள் இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மர்ம எண்ணை முதலில் போலீசார் உண்மை நபராக நம்பினர். ஆனால் அதன் பின்னணியில் காதலன் குஷ்வாஹாவே இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த விஷயத்தில் சோனத்தின் சகோதரர் கோவிந்த் ரகுவன்ஷி, “சஞ்சய் வர்மா” யார் என்று அவருக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவிந்த் உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது வழக்கின் விசாரணைக்கு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. சோனம் எப்போதும் இரண்டு மொபைல் போன்கள் வைத்திருந்ததாகவும், ரூ.10,000 – ரூ.20,000 பணம் தனது கையிலிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மே 11-ஆம் தேதி திருமணம் செய்த ராஜா – சோனம் தம்பதிகள், மே 20-ஆம் தேதி தேனிலவுக்காக மேகாலயா சென்றனர். ஆனால் மே 23 அன்று ராஜா கொலை செய்யப்பட்டார். 10 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் ஜூன் 8-ஆம் தேதி சோனம் போலீசில் சரணடைந்தார். இந்த வழக்கில் சோனம், ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் முக்கோணமே காரணமா அல்லது இதற்கு மேல் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.