சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார் பகுதியில், ஒரு கடை உரிமையாளருக்கு எதிரான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூன் 17ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், நரேந்திர சிங் சாவ்லா என்பவரின் மூத்த மகன் அமர்ஜீத் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து தந்தையை கத்தியால் குத்தியுள்ளார்.

வழக்கம்போல் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நரேந்திர சிங், தனது கடையைத் திறந்து வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு பைக் கடையை நோக்கி வந்ததை கண்டு, அவர் வெளியில் சென்று பார்த்தபோது அதில் இருந்தது வாடிக்கையாளர் அல்ல, அவரது சொந்த மகன் என தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அமர்ஜீத் தனது தந்தையிடம் சென்று வெறித்தனமாக கத்தியால் தாக்கத் தொடங்குகிறார்.

மிகவும் கொடூரமாக, 30 வினாடிகளில் 15 முறை கத்தியால் குத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

அமர்ஜீத், முன்னாள் பள்ளி ஆசிரியராக இருந்தவர். தன்னுடைய வேலை இழந்ததற்காக தனது தந்தையையே காரணம் எனக் கூறி, இவர் மதுபானம் அருந்திய நிலையிலேயே தாக்குதல் நிகழ்த்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு காரணமாக வேலை இழப்பை முன்னிறுத்தியுள்ளார் என்றும், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மனஅமைதி இழந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது நரேந்திர சிங் பலோடாபஜார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அமர்ஜீத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.