மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள மாவடா கிராமத்தில், மூன்று மாத குழந்தையை தாயே  கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 29ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 1 மணியளவில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் 24 வயது திபாலி மேட் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது திபாலியின் கணவர் கடந்த நவம்பர் 2024-ல் மரணம் அடைந்ததையடுத்து, அவர் தனது மாமியாருடன் சேர்ந்து பாலகாட் மாவட்டத்தில் வசித்து வந்தார். இந்த சம்பவம் நடந்த இரவு, திபாலி தனது மாமியாரிடம், “குழந்தை பால் குடிக்கவில்லை, கையையும் அசைக்கவில்லை” என கூறியுள்ளார். அதற்குப் பிறகு, மாமியார் குழந்தையைப் பார்த்தபோது, குழந்தை உயிரற்ற நிலையில் இருந்ததையும் உடல் குளிர்ந்துவிட்டதை உணர்ந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, திபாலி குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக கிர்ணாபூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆரம்ப விசாரணையில், குழந்தையின் மரணம் இயற்கையல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திபாலி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.