
குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வக்பு வாரிய மசோதா, யுஜிசி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் மத்திய அரசின் தாரக மந்திரம். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். பெண்களின் தலைமையின் கீழ் நாட்டை அதிகாரம் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது அரசு. நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.