
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது.
இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாபிரிக்கா 138 ரன்களும் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. மொத்தமாக ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது.
இன்று நான்காவது நாள் போட்டியின் போது தென்னாபிரிக்க அணியில் மார்க்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 136 ரன்கள் வரை எடுத்த நிலையில் ஹேசல்வுட் கேட்சில் அவுட் ஆனார். இறுதியில் தென்னாபிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்ற முதல் முறையாக ஐசிசி சாம்பியன் ஆனது.
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா. இவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முதல் முழுநேர கருப்பின கேப்டன் இவர்தான். ஏழை குடும்பத்தில் பிறந்த பவுமா கிரிக்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள பல தடைகளை தாண்டி வந்தார்.
தற்போது தெம்பா பவுமா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் முதல் கறுப்பின கேப்டன், உலக கோப்பையை வென்ற முதல் தென்னாப்பிரிக்கா கேப்டன் என பல பெருமைகளை தேடி தந்துள்ளார். அவரது உயரத்தை விமர்சித்தவர்கள் இன்று அவரது சாதனையால் அசந்து போய்விட்டனர். தென் ஆப்பிரிக்காவின் பூர்வீக மொழிகளில் ஒன்றான Xhosa- ல் தெம்பா பாவுமா என்றால் நம்பிக்கை. பெயருக்கு ஏற்பவே கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையையும் காப்பாற்றி விட்டார்.