ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி நேற்று தேதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இன்னும் 40 வருடங்களுக்கு திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. ஆனால் பிரதான இயக்கமாக இருக்கும் அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இது அந்த இயக்கமே இல்லாமல் போனதற்கு சமம்.

இனி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்ற கட்சி இருக்குமா இல்லையா என்பது சந்தேகம் தான். பிரசாந்த் கிஷோர் ஆலோசனை பெற்றதால் திமுக வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றி பெற்றோம். வருகிற சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகள் மட்டுமன்று 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடும். மேலும் சினிமா வேறு அரசியல் வேறு என்று பொதுமக்கள் பிரித்துப் பார்ப்பதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டுகள் விழுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று கூறினார்