இந்த இந்திய வீரரை நான் ஆஸி.க்காக தேர்வு செய்வேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்..

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஆசிய அணிகளை சிறப்பாக தயார்படுத்தும் வகையில் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனிடம், தற்போதைய இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வைத்தால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மேத்யூ ஹெய்டன், “தற்போதைய இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்கான உலக கோப்பை தொடரில் விளையாட வைக்கலாம்” என்றார். இந்திய அணிக்காக பும்ரா 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.