தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜூன் 1ஆம் தேதி இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (வயது 20) நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இக்கொடூர தாக்குதலில், பலத்த காயங்களுடன் தரையில் விழுந்த பிரகதீஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குள், செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த அதே மர்ம நபர்கள், கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரையும் அரிவாளால் வெட்டினர். இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கஸ்தூரி ஒரு டைப்பிங் இன்ஸ்டிடியூட் மற்றும் இ-சேவை மையம் நடத்தி வந்தார்.

ஒரே இரவில் இரண்டு கொலைகள் நடந்தது கோவில்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பதிலுக்கு பதில் கொலைவா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படையினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.