
சென்னை மெரினா கடற்கரை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. இங்கு ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஊர்காவல் படை வீரர் சீனிவாசன் என்பவர் அவரின் அருகே சென்றார். அவர் காயங்களுடன் கிடந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த நிலையில் பின்னர் அவரிடம் நடந்து விவரங்களை கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தன்னுடைய பெயர் வெங்கடேசன் (43) என்றும், ஒரு திருநங்கையும் அவருடன் வந்த வாலிபரும் தன்னை இப்படி அடித்து விட்டு சென்றதாக கூறினார். பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருக்கிறது.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு 17 வயது திருநங்கை மற்றும் அவரது நண்பர் ராகேஷ் குமார் (23) ஆகியோர்தான் அந்த நபரை கொலை செய்தது தெரிய வந்தது.
அதாவது இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேசன் அந்த 17 வயது திருநங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு உல்லாசத்திற்கும் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் தான் திருநங்கையும் அவரது நண்பரும் சேர்ந்த அந்த நபரை கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடியது தெரியவந்தது. இதில் ராகேஷ் குமார் ஆட்டோ டிரைவர்.
மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.