
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகரை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடத்தில் இன்ஜின் செயலிழப்பால் மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதி நொறுங்கியது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி மதியம் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள் மற்றும் 242 பயணிகளில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தின் வீடியோவை முதன்முதலில் பதிவு செய்தது ஆர்யன் என்ற 17 வயது சிறுவன். இவர், முன்னாள் ராணுவ வீரரின் மகனாகும். தனது தந்தையைச் சந்திக்க விடுமுறைக்காக அகமதாபாத் வந்த அவர், விமானங்கள் பறப்பதை வீடியோ எடுக்க வீட்டின் மொட்டைமாடிக்கு சென்றிருந்தார்.
அப்போது புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென கீழே இறங்கியது. ஆரம்பத்தில் அது தரையிறங்குவதாக நினைத்த ஆர்யன், அதனை வீடியோவாக பதிவு செய்தார். ஆனால் சில விநாடிகளில் விமானம் மேல் இருந்து விழுந்து தீப்பிழம்புடன் வெடித்தது. இந்த வீடியோவின் நீளம் 24 விநாடிகள் மட்டுமே. ஆனால் அது நாடெங்கும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை நேரில் பார்த்த ஆர்யன் கடுமையான மன உளைச்சலில் சிக்கியுள்ள நிலையில், தூக்கமின்மை காரணமாக தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. அவர் பதிவு செய்த வீடியோ தற்போது விசாரணையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. விபத்து திட்டமிட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து இந்தியாவில் கடைசியாக பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது என கூறப்படும் நிலையில், இதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விமான போக்குவரத்து துறை சிந்திக்க வேண்டிய தருணமாக இது மாறியுள்ளது.