
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் அண்மையில் கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியானது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் தக்ஷின் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நான் சினிமா துறையில் இருந்து விலகி இருக்கிறேன். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை திரைத்துறையில் பயணித்துள்ளேன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15 வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் 15 படங்களை தயாரித்து உள்ளேன். இது தவிர நல்ல படங்களை வாங்கி விநியோகமும் செய்து வருகிறேன். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2000 கோடி என தற்போது ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இங்கிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உண்மை என்னவென்று தெரியும். அது பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் மற்றொரு தயாரிப்பாளருக்கு தான் புரியும். போகிற போக்கில் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிவிட்டு போகிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.