உத்தரப்பிரதேசம்  மாநிலம் மீரட்டில்  திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை எதிர்த்த மனைவியின் தலையை மொட்டையடித்து, பின்னர் மூன்று முறை ‘தலாக்’ கூறி, 2 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேற்றிய கணவரின் கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது – “எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. மே 25-ஆம் தேதி, அவரை மற்றொரு பெண்ணுடன் பார்த்தபோது, நான் கேள்வி எழுப்பினேன். அப்போது, அவர் கோபமடைந்து, தனது உறவினரை அழைத்தார். அந்த நபர் துப்பாக்கி காட்டி மிரட்டினார். பிறகு, என் கணவர் என்னை அடித்து, என் தலையை வலுக்கட்டாயமாக மொட்டையடித்தார். பின்னர் ‘தலாக்’ என்று மூன்று முறை கூறி, என்னை மற்றும் என் 2 வயது மகளையும் வீட்டில் இருந்து வெளியேற்றினார்.”

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் டி.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, சம்பவம் லிசாடி கேட் பகுதியில் நடந்ததாக கூறி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அவர் லிசாடி கேட் காவல் நிலையத்திற்குச் சென்றும், எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மனம் உடைந்த அந்த பெண், வியாழக்கிழமை, நேரடியாக எஸ்.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை இருந்தது. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவர், முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த உறவினரை அழைத்து, மிரட்டல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து மாமியார் வீட்டிலிருந்து பணம் கொண்டு வருமாறு வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகாரை தற்போது உயரதிகாரிகள் பெற்றுக் கொண்ட நிலையில், போலீசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..