இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், வெறும் 15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம் குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிரட்டி வரும் இவர், தனது திறமையை முழுமையான ஆல்-ஃபார்மட் வீரராக மாற்ற சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சூர்யவன்ஷிக்கு பயிற்சியளித்துள்ள ராகுல் அயர்லாந்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதுகுறித்து மனம் திறந்தார். அவர் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல் மூலம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அனுபவத்தைப் பெறுவது மிகச் சிறந்த விஷயம். அதேசமயம், அவர் உள்நாட்டுத் தொடர்களில் சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் விளையாடி தனது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து வாழவும் வளரவும் இது போன்ற வீரர்கள் அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது அவசியமாகும்” என்றார்.

 

சூர்யவன்ஷி இதுவரை வெறும் 8 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி 17.25 என்ற சராசரியைப் பெற்றுள்ளார். இதனால், நீண்ட வடிவ கிரிக்கெட்டில் அவர் இன்னும் பக்குவமடைய பல வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. இதுகுறித்து மேலும் பேசிய டிராவிட், “அவருக்கு இப்போது வெறும் 15 வயதுதான் ஆகிறது. நாம் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அவர் வெற்றியின் உச்சத்தை விரைவில் தொட்டாலும், எதிர்காலத்தில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்திப்பார். உலகெங்கிலும் உள்ள டி20 லீக்குகளுக்குப் பின்செல்லாமல், இந்திய உள்நாட்டு சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடுவது அவரது நீண்ட கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும்” எனத் தெரிவித்தார்.

துலீப் கோப்பையில்  கிழக்கு மண்டல அணிக்காக விளையாடத் தயாராகி வரும் சூர்யவன்ஷிக்கு, இது மிகப்பெரிய அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் ஜொலிக்கும் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக அவர் உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை திராவிட் வெளிப்படுத்தியுள்ளார்.