
டெல்லி உயர் நீதிமன்றம், “ஒரு சிறுமியின் உதடுகளை அழுத்துவது, தொடுவது அல்லது அருகில் படுத்துக்கொள்வது, பாலியல் நோக்கம் இல்லாமல் நடந்திருந்தாலும், அது ‘கடுமையான பாலியல் தாக்குதல் என்ற POCSO) சட்டத்தின் கீழ் வராது என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், இது பெண்களின் மரியாதையை மீறும் செயல் என்பதால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் (பெண்ணின் மரியாதையை துன்புறுத்துதல்) குற்றமாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது , ஒரு 35 வயதான நபர் தனது 12 வயது சிறுமியான உதடுகளை அழுத்தியதாகவும், அருகில் படுத்துக்கொண்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2024 ஜூலை 30 அன்று நகர நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 354 மற்றும் POCSO சட்டம் பிரிவு 10 (கடுமையான பாலியல் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் அவருக்கு குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர், “உதடுகளை தொடுதல் மற்றும் அழுத்துதல் பாலியல் நோக்கில் செய்யப்படவில்லை” என தனது முறையீட்டில் வாதிட்டார். எனவே, இது POCSO சட்டத்தின் கீழ் குற்றமாக வராது என்றும், அவர்மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது வாக்குமூலத்தில், இந்தச் செயல்கள் அவருக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக தெளிவாக தெரிவித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நரேஷ் குமார் சஹர் வாதிட்டார். எனவே, இந்த குற்றச்சாட்டு முக்கியமானது எனவும், வழக்கு தொடரப்படவேண்டும் எனவும் போலீசார் வலியுறுத்தினர்.
நீதிபதி ஸ்வரணா கண்டா ஷர்மா, “ஒரு பெண்ணின் மரியாதை மீறப்படுவதை சட்டம் கண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். ஆனால், “இந்தச் செயல்கள் பாலியல் நோக்குடன் செய்யப்பட்டதாக நேரடி ஆதாரம் இல்லாததால், POCSO சட்டத்தின் கீழ் கடுமையான பாலியல் தாக்குதல் எனக் கருத முடியாது” என தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான குற்றவியல் விளக்கங்களைப் பற்றிய விவாதங்களை மீண்டும் உருவாக்கி உள்ளது.