இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட போர் நிறைவடைந்து, ஜூன் 24ஆம் தேதி இருநாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், அதற்குப் பின் முதன்முறையாக ஈரான் உயர்நிலைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உரையாற்றியுள்ளார். அவரது உரை தற்போதைய மேற்கு ஆசிய அரசியலை சர்ச்சைக்குரிய நிலையில் நிறுத்தியுள்ளது.

ஜூன் 26 அன்று ஈரானின் அரசு  தொலைக்காட்சியில் வெளியான உரையில், கமேனி கூறியதாவது:
“இந்தப் போர் முழுவதும் அமெரிக்காவுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. இதுவே எங்கள் வெற்றியின் சான்று. இஸ்லாமிய குடியரசான ஈரான் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவும், சியோனிஸ நாடான இஸ்ரேலும் எங்களை வீழ்த்த முடியவில்லை.
அவர்களின் தாக்குதல்களுக்கு பதிலாக, ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்தது.”

கமேனி தனது உரையில், கத்தாரிலுள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குறிப்பிடுவதாகவும், அது அமெரிக்காவின் தலையீட்டுக்கு தக்க பதிலடி எனவும் தெரிவித்தார். மேலும், சியோனிஸ ஆட்சி முற்றிலும் அழிக்கப்படும் என்பதை உணர்ந்ததால் தான் அமெரிக்கா தலையிட்டது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னதாக ஜூன் 22ஆம் தேதி, அமெரிக்கா தனது பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி, ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் முக்கிய அணுசக்தி கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலாகத்தான் தற்போது கமேனி தனது வெற்றிக் கணிப்பை முன்வைத்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த உரை மேற்கு ஆசியாவில் சமாதானத்திற்கு வித்திடுமா, அல்லது புதிய திருப்பம் உருவாக்குமா? என்பது வரும் நாட்களில் தெரியவரும். ஆனால், கமேனியின் “அமெரிக்கா முகத்தில் அறை விழுந்தது” என்ற வரிகள், தற்போது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பது மட்டும் நிச்சயம்.