கேரள மாநிலத்தில் இருந்து ஒரு அதிர்ச்சிக்கான திருமண மோசடி சம்பவம் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமண தளத்தின் வழியாக ரேஷ்மா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் செய்ய முடிவு செய்தார்.

திருமண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நஹனம் எனப்படும் திருமணத்திற்கு முன் குளிப்பாட்டுச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரேஷ்மா, இந்த சடங்கைத் தவிர்த்து அழகு நிலையத்திற்கு செல்லவேண்டும் என்று வற்புறுத்தினார். இது மணமகனின் சகோதரருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில், ரேஷ்மாவின் கையில் இருந்த பையை அவர் பறித்துப் பார்த்தபோது, அதில் முந்தைய திருமணங்களுக்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விசாரணையில், ரேஷ்மா கடந்த 10 ஆண்டுகளில் 12 முறை திருமணம் செய்துள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் திருமணத்திற்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்துடன் தப்பியோடியதும்  தெரியவந்தது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு மற்றொருவரை திருமணம் செய்ததும், அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததும் போலீசாரிடம் ரேஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் விசாரணையில், ரேஷ்மா 2014-ல் ஒருவருடன் ஓடி திருமணம் செய்ததிலிருந்து இந்த தொடர் மோசடி நிகழ்ந்துள்ளதாகவும், 2022 வரைக்கும் நான்கு திருமணங்கள், 2025 இல் மட்டும் 10 நாட்களில் இரு திருமணங்கள் செய்ததும் தெரியவந்தது.

2023-ல் ரேஷ்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், திருமண தளங்களை வைத்து பெண்கள் அல்லது ஆண்கள் செய்கிற மோசடிகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் உருவாகி வருகின்றன.