
வடக்கு சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து டீஸ்டா ஆற்றை நோக்கி கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழக்க, இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஓட்டுநர் உட்பட எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் என காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு, சுங்தாங்–முன்சிதாங் சாலையில், லாச்சுங்கிலிருந்து லாச்சென் நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் சுமார் 1000 அடி உயரத்தில் இருந்து சறுக்கி விழுந்தது. பலத்த மழையால் சாலை பிசுக்கிய நிலையில், ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததே காரணமாகக் கூறப்படுகிறது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த வாகனத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மங்கன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனம் டெட்சு பூட்டியா தெரிவித்ததாவது – “இதுவரை ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் இருந்த மற்ற எட்டு பேரை தேடும் பணியில் போலீசார், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.
இந்திய ராணுவம், ITBP (இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை), உள்ளூர் நிர்வாகம் மற்றும் சிக்கிம் காவல்துறை இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. உயரமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறப்பு டைவர்ஸ் மற்றும் மீட்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும், கடுமையான நிலப்பரப்பும், தடுமாறும் வானிலை சூழ்நிலையும் மீட்புப் பணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
படுகாயமடைந்தவர்கள், சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள STNM மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் அந்தப் பகுதியில் முழுமையாக தடுப்புவலையைக் கட்டி, அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது வரை காணாமல் போனவர்களின் நிலை குறித்து உறுதியான தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.