யோகா என்பது உடல் மற்றும் மன நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. அந்தப் பயிற்சியில் நெகழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலை ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே யோகா பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கடந்த ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்திலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பலரும் பல யோகாசனங்களை செய்து ஆச்சரியப்படுத்தினர்.

அதன்படி ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயப்பட்டணாவை சேர்ந்த பிருத்வி(13) என்ற மாணவி ஒரே நிமிடத்தில் 10 கடினமான யோகாசனங்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவர் ஒரே நிமிடத்தில் உடலை வளைத்து, நெளிந்து செய்யும் யோகாசனங்கள் அனைவரையும் ஈர்த்தது. மேலும் அவர் தினம்தோறும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்வதாகவும், சுமார் 600 ஆசனங்களை அவர் செய்வார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நிமிடத்தில் 10 கடினமான யோகாசனங்களை செய்து பிருத்வி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சிறுமியின் அசாதாரணமான செயலால் பலரும் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.