
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள ஐஷ்பாக் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் (R.O.B) கட்டப்பட்டு தற்போது திறக்க தயாராக உள்ளது. ஆனால், இந்தப் பாலத்தில் 90 டிகிரி கோணத்தில் வளைவு உருவாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டுனர்கள் இந்தப் பாலத்தின் மீது வந்தவுடன் கிட்டத்தட்ட 90 டிகிரியில் திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது விபத்து அபாயத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது.
இந்த பாலத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங், இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பாலம் “சூப்பர் எலிவேஷன்” வடிவமைப்பில் மாற்றப்பட வேண்டும் என்றும், வெளிப்புற சாலை பகுதி உயர்த்தப்பட்டு வாகனங்கள் திரும்பும் போது சீராக சுழல வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது வாகனங்கள் சுவரில் மோதும் அல்லது எதிர்பக்கம் வருகிற வாகனத்தில் மோதும் அபாயம் உள்ளது.
இந்த பாலம் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ.18 கோடி ஆகும். பாலத்தின் நீளம் 648 மீட்டர், அகலம் 8 மீட்டராக உள்ளது. இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்த ஒன்றாகும். கட்டுமானத்தின் போது ரயில்வே துறையும் இந்த 90 டிகிரி திருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இடப்பற்றாக்குறையால் மாற்றமில்லை என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கிறது.