நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த பத்து ரூபாய் நாணயமானது வாங்க மறுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், சிறிய கடைகள் என பல இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை யாரும் வாங்குதில்லை. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.