உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், ஒரு நபர் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து மற்றும் பராமரிப்புத் தொகை (Maintenance) கோரும் வழக்கு நிலுவையில் உள்ளது.

தனக்குப் பராமரிப்புத் தொகை வழங்கக் கூடாது என்பதற்காகத் தனது கணவர் உடல்நிலை சரியில்லாதது போலப் பொய் கூறி ஏமாற்றுவதாக அவரது மனைவி நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு, உடல் முடங்கிப் பேச்சுத் திறனை இழந்த நிலையில் இருக்கும் தனது மகனை, ‘பொய்யன்’ என்று மருமகள் கூறுவதைக் கேட்டு ஆத்திரமடைந்த கணவனின் குடும்பத்தார், அவரது உண்மையான நிலையை நிரூபிக்க அவரை ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கே கொண்டு வந்தனர்.

நீதிமன்றத்தில் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட அந்த நபரைக் கண்ட நீதிபதி மற்றும் அங்கிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போயினர். இதுகுறித்து அந்த நபரின் சகோதரி பேசுகையில், “திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து சென்ற எனது தம்பி மனைவி, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் படுக்கையில் இருக்கும் தனது கணவரை ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை;

ஆனால், இப்போது பணத்திற்காக அவர் பொய் சொல்கிறார் எனப் பழிசுமத்துகிறார்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார். அவர்களின் தரப்பில் மருத்துவ அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அந்த நபரின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.