
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தின் ரால்வாஸ் கிராமத்தில் ஹோலி பண்டிகையின் போது நடந்த சோகமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ், ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மறுத்ததற்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அசோக், கலுராம் மற்றும் பப்லு ஆகிய மூவர், ஹன்ஸ்ராஜின் மீது வண்ணம் பூச முயன்ற போது, அவர் அதை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ஹன்ஸ்ராஜை தாக்கினர். முதலில் உதைத்து, பின்னர் பெல்ட்டால் அடித்து, இறுதியாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹன்ஸ்ராஜின் உடலுடன் நெடுஞ்சாலையில் அவரது பெற்றோர்களும், கிராம மக்களும் நீதிக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்த பின்னர் மக்கள் அமைதியாக கலைந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவி, பலரது கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஒரு சிறிய விஷயத்திற்காக உயிரைக் காவு வாங்கும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.