
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது. மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய முத்துகிருஷ்ணன் தலைமை ஆசிரியர் திட்டியதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்பு இரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனை காணவில்லை என அவரது பெற்றோர் வீட்டின் உள்ளே தேடிப் பார்த்துவிட்டு வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது முத்துகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தூங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துகிருஷ்ணனின் பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துகிருஷ்ணன் அணிந்திருந்த சட்டையை போலீசார் சோதனை செய்த போது அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் “என்னுடைய இந்த முடிவிற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என அவர் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் 4 ஆசிரியர்கள் பெயர்களை எழுதியிருந்தார்.
எனவே அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.