
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர், கடந்த மே 11-ஆம் தேதி சோனம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, இருவரும் ஹனிமூனுக்காக மேகாலயா மாநிலம் சென்றனர்.
அங்கு, தலைநகர் ஷில்லாங்கில் வாடகைக்கு ஸ்கூட்டர் எடுத்து சுற்றுலாவிற்கு கிளம்பி, புகழ்பெற்ற சிரபுஞ்சி பகுதியில் சென்றுள்ளனர். மே 24-ஆம் தேதி நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த லாட்ஜை காலி செய்து விட்டு கிளம்பியதிலிருந்து இருவரிடமும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
8 நாட்கள் கழித்து, குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இறங்கிய நிலையில், ஜூன் 2ஆம் தேதி, அந்த லாட்ஜிலிருந்து 20 கி.மீ தொலைவில் ராஜா ரகுவன்ஷியின் சடலம் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது கையில் “ராஜா” என்ற டாட்டூ அடையாளம் மூலமாக உடல் அடையாளம் காணப்பட்டது. அருகில் ஒரு இளம்பெண்ணின் வெள்ளை உடை, உடைந்த செல்போன் கவர், மாத்திரைகள் உள்ளிட்டவை கிடைத்திருந்தன.
போலீசார் தற்போது சோனம் எங்கே? என்ற கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கின்றனர். இது தற்கொலைதான் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், ராஜாவின் கொலையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலுமாக, ராஜா மற்றும் சோனத்தை சுற்றுலா அழைத்த லாட்ஜ் ஊழியர்கள், வாடகை ஸ்கூட்டர் வழங்கியவர்கள், சுற்றுலா ஏஜென்ட்கள் ஆகியோரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் ஸ்கூட்டர் மற்றும் ரெயின் கோட் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
தற்போது, போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கிடைக்கும்வரை ராஜாவின் பெற்றோர் உடலை இந்தூருக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். இச்சம்பவம் மேகாலயாவை கடந்து, வட மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது,