சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில், மனித நேயமற்ற முறையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​அங்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை, ஸ்ட்ரக்சரிலாவது (Stretcher) வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை மிகத் துணிச்சலாக லஞ்சம் வாங்கியுள்ளனர். லஞ்சம் வாங்கும் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 10 முதல் 15 பேருக்கு கால் அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில், ஏழை எளிய மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், “ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை” என்கிற அவல நிலையை உணர்த்தும் வகையில் ஊழியர்களின் லஞ்ச வெறி அரங்கேறி வருகிறது.

​தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசு, ஏழை எளிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த லஞ்ச விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நோயாளிகளைத் துன்புறுத்திப் பணம் பறித்த அந்த ஊழியர்கள் மீது அரசு தகுந்த மற்றும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் மிக ஆக்ரோஷமாக வலியுறுத்தி வருகின்றனர்.