
உடுப்பி மாவட்டம் ஹீலிகானா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பூஜாரி (42), பெயிண்டராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி ரேகா (27), சங்கர நாராயணாவில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். கடந்த 20ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, வீட்டுக்கு தாமதமாக வந்த கணேஷ், ரேகா செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்ப்பதை கண்டதும் கோபமடைந்தார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோசமடைந்து, கணேஷ் கத்தியை எடுத்து ரேகாவின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த ரேகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணேஷ் பூஜாரி கைது செய்யப்பட்டு காவலில் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட வாக்குமூலத்தில், “எப்போதும் செல்போன், இன்ஸ்டா ரீல்ஸ், எத்தனை முறை கூறியும் கேட்க மாட்டாள்” என்ற காரணத்தைக் கூறினார். ஆனால், பின்னர் வெளியான தகவல்களில், ரேகா வீட்டுப் பணிகளையும், பெட்ரோல் பங்கில் நாள் முழுக்க காலில் நின்றும் உழைத்துப் பிறகு, ஓய்விற்காக ரீல்ஸ் பார்த்திருக்கலாம் என்பதே தெரியவந்தது. மேலும், இருவருக்குள்ளும் 15 வயது வித்தியாசம், நெடுநாள் கருத்து மோதல்கள், குடும்ப பிணைப்பில்லாமை ஆகியவை கொலையின் பின்னணியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் ஆணாதிக்க மனப்பான்மைதான் இக்கொலையின் பின்னணி எனக் கண்டனம் தெரிவிக்கின்றனர். “ஒரு பெண் குடும்பமும் வேலைக்குமான பொறுப்பையும் செய்துவிட்டு, ஓய்வாக ரீல்ஸ் பார்த்ததற்காக கொல்லப்படுகிறாள் என்றால், அது இன்ஸ்டா பிரியம் அல்ல, அதிகாரப் போக்கின் வெளிப்பாடு” என கருத்துதெரிவித்து வருகின்றனர்
இதுபோன்ற கொடூர சம்பவங்கள், பெண்களின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சமஉடமையின் மீதான சிந்தனையை சமூகத்தில் மீண்டும் எழுப்பி இருக்கின்றன. போலீசார் தற்போது பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.