
மேற்குவங்க மாநிலம் நாடியா பகுதியில் ஒரு இளம் பெண் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், இந்த பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
இந்த மாணவி பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்த நிலையில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களின் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாணவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவருக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக மாணவி வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த வாலிபரையே திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் திருமண வயதை அடைந்தவர் என்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக அவர்களின் திருமணத்தில் தலையிட முடியாது என போலீசார் கூறிவிட்டனர். இது மாணவியின் குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இதனை அவமானம் என கருதினர். ஒரு கட்டத்தில் தங்கள் மகள் இறந்து விட்டதாக கருதி அவர்கள் தர்ப்பணமே கொடுத்துவிட்டனர்.
அதன்படி மாணவியின் வீட்டில் உள்ள அவரது புகைப்படத்திற்கு இறந்தவர் போல் மாலை அணிவித்து அதற்கான பூஜைகளை செய்தனர். இது தொடர்பாக மாணவியின் தாய் கூறும் போது எங்கள் மகள் செய்தது மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும் அவள் இல்லை என்று தற்போது நினைத்து அவளுடைய உடைகள் பொருட்கள் அனைத்தையும் நாங்கள் எரித்துவிட்டோம் என்றார்.